புதன், 27 மே, 2015

மதிப்பற்றதா மதிப்பெண்?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானவுடன் பதிவு போடலாம் என்று காத்திருந்தேன். ஆனால், தேர்வு முடிவு பற்றிய எதிர்மறை விமர்சனங்கள், அந்த எண்ணத்தை தடுத்து விட்டன. முடிவு வெளியான தினத்தில் சந்தித்த நண்பர் ஒருவர்,  ‘நீங்க வேணா விசாரியுங்க, யாராச்சும் நிச்சயமா 500க்கு மேல மார்க் வாங்கீருப்பாங்க’ என்றார். நக்கல்தான். ‘இந்த முறை மார்க் அள்ளிப் போட்டுட்டாங்க’ என்பது, பலரும் கூறும் கருத்தாக இருக்கிறது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் ஏனோதானோவென இருப்பதாகவும், விடைத்தாள் திருத்தும் முறை சரியில்லை என்றும், பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாகி விடக்கூடாது என்ற கவலையில், எல்லோருக்கும் கூடுதலான மதிப்பெண் போட்டு தேர்ச்சி பெற வைப்பதாகவும், மதிப்பெண்களை, மதிப்பே இல்லாத வெற்று எண்களாக தேர்வு முடிவுகள் மாற்றி விட்டதாகவும், பல விதமான விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதிகப்படியான பேர், சென்டம் வாங்கியிருப்பதும் இத்தகைய கருத்துகளுக்கு வலுச் சேர்த்து விட்டது.
மதிப்பெண் தாறுமாறாக அதிகரித்தமைக்கு, எனக்குத் தெரிந்த காரணம் ஒன்றுண்டு. அது, ஒரு தேர்வுக்கும், மற்றொரு தேர்வுக்குமான இடைவெளி. தமிழ் முதல் தாளுக்கும், இரண்டாம் தாளுக்கும் இடையே நான்கு நாட்கள் விடுமுறை. அறிவியல் தேர்வுக்கு ஆறு நாட்கள்; சமூக அறிவியலுக்கும், கணிதத்துக்கும், தலா மூன்று நாட்கள். விடுமுறை இல்லாத தேர்வு, ஆங்கிலம் மட்டுமே.
அறிவியலில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்டம் வாங்கியதற்கு, ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்ததும், 75 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தியதும் முக்கிய காரணங்கள்.
தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பதும், மாணவர்கள் 499 மதிப்பெண் பெறுவதும், தமிழகத்தில் இதுவொன்றும் முதல் முறையல்ல; சில ஆண்டுகளாகவே இதே நிலைதான் இருந்து வருகிறது. மகனோ, மகளோ, என்ன வகுப்பில் படிக்கின்றனர் என்றே தெரியாமல் இருந்த தாய், தந்தையர் காலம் மலையேறி விட்டது. இப்போதைய பெற்றோர், ஆசிரியரின் குலம், கோத்திரம், குடும்ப விவகாரம் வரை தெரிந்து வைத்திருக்கின்றனர். கிராமத்துப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் கூட, புளூபிரிண்ட்டும், வினா வங்கி புத்தகங்களும் வைத்துக் கொண்டு தேர்வுக்கு தயார் செய்கின்றனர்.
பல அரசுப்பள்ளிகளில், ஆசிரியர்கள், தங்கள் கைக்காசை செலவழித்தும், ஸ்பான்சர் பிடித்தும், மாணவியருக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதை காண முடிகிறது. விளைவு, ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆகவே, ‘நான் படித்த காலத்தில் இப்படியெல்லாம் மதிப்பெண் போடவில்லையே’ என்று பேசுவதும், எழுதுவதும், சரியான ஒப்பீடாக இருக்க முடியாது என்பதே என் கருத்து.

டெய்ல் பீஸ்: என் மூத்த மகள், 481 மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறாள். மிகவும் சிரமப்பட்டு பயிற்சி செய்த கணிதத்தில் 92 மதிப்பெண்கள். இதையொட்டி நடத்தப்பட்ட ஒரு வார கால கொண்டாட்டங்கள் புதன்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளன.

தேர்வு முடிவு பற்றிய விலாவாரியான பார்வை:
மேலோட்டமான பார்வை: