திங்கள், 9 பிப்ரவரி, 2015

பலித்தது, கணிப்பாளர் கணக்கு!

‘அரசியல் விஞ்ஞானி, அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் மிருகம்...’ என்கிறது, அவரது ட்விட்டர் தன் விவரக்குறிப்பு. அவர், யோகேந்திர யாதவ். டில்லித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு, கெஜ்ரிவாலை தவிர்த்த பிற காரணங்களை பட்டியலிட்டுப் பாருங்கள்; அதில், முதலிடத்தில் யோகேந்திர யாதவ் பெயர் இருக்கும்.
தேர்தல் கணிப்பாளராக ஒரு காலத்தில், ‘டிவி’ அரங்குகளில், மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்த தாடிக்காரர் யோகேந்திரா, ஹரியானா மாநிலம், குர்கானை சேர்ந்தவர்.
ஆம் ஆத்மியின் பின்னணியில் இவர் இருக்கும் விஷயத்தை மிகவும் தாமதமாக தெரிந்து கொண்ட முந்தைய காங்கிரஸ் அரசு, பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றியது.
அதைப்பற்றி கவலைப்படாத யோகேந்திரா, ஆம் ஆத்மியில் நீடித்தார். முந்தைய டில்லி சட்டசபை தேர்தலிலும், தொடர்ந்த லோக்சபா தேர்தலிலும், அவரது பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
குர்கான் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு டிபாசிட் இழந்தாலும், தேர்தல் அரசியலில் இருந்து அவர், ஓடிவிடவில்லை. மீண்டும் டில்லி தேர்தலுக்கான திட்டமிடுதலில் களம் இறங்கினார்.
ஒரு சில நாட்களுக்கு முன், ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றிவாய்ப்பு என்று வெளியான செய்திகளைப் பற்றிக்கூறிய அவர், ‘கருத்துக் கணிப்புகள் கூறும் இடங்களைக் காட்டிலும், எங்கள் கட்சி அதிக இடங்கள் பிடிக்கும். 57 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது’ என்றார். இப்போது வெளியாகி வரும் முடிவுகளைப் பார்த்தால், கணிப்பாளரின் கணக்கு பலித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்!

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

இந்தா பிடி, சாபம்!

பொதுவாழ்க்கை, பொதுவாழ்க்கை என்று, மூச்சுக்கு முந்நூறு முறை, நாமெல்லாம் ஊருக்குள் உதார் விடும் இந்த அற்ப மானிடப்பிறவியில், அப்பாவிகள் சந்திக்கும் அவமானங்கள், எண்ணிலடங்காதவை. அவற்றில், அதிமுக்கியமானது, போலீஸ்    சோதனை.
இரவு நேரங்களில், டார்ச் விளக்கும், குண்டாந்தடியும் கைகளில் ஏந்தி, வாகனத்தை வழி மறிக்கும் அவர்களிடம், அன்னைத்தமிழின் அருமை பெருமைகளையும், பன்மை, ஒருமை விதிமுறைகளையும், இன்னபிற இலக்கண இலக்கிய சங்கதிகளையும் எதிர்பார்ப்பது, மனைவியானவள், ஞாயிற்றுக்கிழமை மூன்று வேளையும் சமைக்க வேண்டுமென எதிர்பார்ப்பதற்கு சமம்.
சமூகத்துக்கு அப்படி பேராசை கிடையாது. நரி இடம் போனாலென்ன, வலம்  போனாலென்ன, நம்மைக் கடிக்காமல் விட்டால் போதாதா? ஆகவே, இரவு நேரமெனில், போலீஸ்காரர்கள் வம்பிழுத்தாலும், பதில் பேசாமல், அமைதி காப்பதே சமூகத்தின் கொள்கை.
ஆனால், பகல் நேரத்தில், அப்படியெல்லாம் எளிதில் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணாகதி அடைவதற்கு சமூகத்தின் மனம் ஒப்புவதில்லை. அதிலும், வீடு, அலுவலகம், பள்ளி, வீடு, அலுவலகம் என சுற்றிச்சுழல வேண்டிய, மதிய உணவுக்கும், மாலை காப்பிக்கும் இடையிலான சிறுபொழுது இருக்கிறதே! அப்பப்பா...! பெரும் சிக்கல்கள் நிறைந்தது; அவற்றைச் சமாளிப்பதற்கு, சமூகம் வைத்திருக்கும் ஹோண்டாவும், நோக்கியாவும் போதவே போதாது.
அன்றொரு நாள், இளைய மகளை பள்ளியில் இருந்து, வீட்டில் கொண்டுசென்று விட்டு, சமூகம் அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழக்கமானதொரு போலீஸ் சோதனை.
பெண் போலீஸ் ஒருவர், ஒற்றைக் கையை மட்டும், ஸ்டைலாக காட்டி, வழிமறித்தார்.
‘டாக்குமென்ட்ஸ் எடுங்க’ என்று உத்தரவு போட்டுவிட்டு, அடுத்த வண்டிக்கு கை காட்டப் போய் விட்டார். ‘வண்டியை தடுத்து நிறுத்துவது மட்டும்தான் அவருக்கு இடப்பட்ட வேலை போலும்’ என்றெண்ணிக் கொண்டது, சமூகம்.
அன்றைக்குப் பார்த்து, அலுவலகத்தில் கொஞ்சம் அவசர வேலை. ஆகவே, சமூகம், வண்டியிலேயே உட்கார்ந்தபடி, டிரைவிங் லைசென்ஸை எடுத்து நீட்டிவிட்டது.
நான்கடிக்கு அப்பால் நின்று கொண்டிருந்த போலீஸ்காரருக்கு, வீட்டில் சம்சாரத்துடன் ஏதோ பிரச்னை இருந்திருக்க வேண்டும்.
‘ஏன், எறங்கி வர மாட்டீங்களோ’ என்று, சமூகத்தைப் பார்த்து, சுடச்சுட கேட்டு விட்டார். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு, மானம், அவமானம் பார்த்தால் முடியுமா? வண்டியை ஆஃப் செய்து, சைடு ஸ்டாண்ட் போட்டுவிட்டு, லைசென்ஸ், ஆர்சி, இன்சூரன்ஸ் நகல்களை கொண்டு சென்றது சமூகம்.
வாங்கிப்பார்த்த போலீஸ்காரர், பொடி எழுத்தில் இருந்த இன்சூரன்ஸ் ஆவணத்தை எழுத்துக்கூட்டி, சிரமப்பட்டு படித்தார். அப்படியும் அவரால், பெயர் எங்கே, தேதி எங்கே என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லை.
‘எல்லாம் கரெக்டா இருக்குதா’ என்றார்.
‘நீங்களே பாத்துக்கலாமே’ என்றது, சமூகம்.
அவர் மனதுக்குள் திட்டிக் கொண்டே, இன்சூரன்ஸ் நகலை உற்று உற்றுப் பார்த்தார். அப்புறம், எதுவுமே பேசாமல், சமூகத்திடமே திருப்பிக் கொடுத்து விட்டார். போவென்றோ, இரு என்றோ, எதுவும் சொல்லவில்லை.
‘சார், கரெக்டா இருக்குதா, நான் போலாமா’ என்றது, சமூகம்
அவருக்கு, நக்கல் செய்வதாக, தோன்றியிருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, அந்தப்பக்கம் சென்று விட்டார். ‘போனால் போகட்டும்’ என்று, வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டது சமூகம்.
அந்த வழித்தடத்தில், செயின் பறிப்பு அடிக்கடி நடக்கும். ஆகவேதான், 24 மணி நேரமும் போலீஸ் சோதனை நடந்து கொண்டே இருக்கிறது; திருடர்கள் தான் பிடிபட்டபாடில்லை.
‘யாராவது ஏமாந்தவன் கிடைத்தால், வண்டியை விட்டு இறங்கி வரச்சொல்லும் போலீஸ்காரர்கள் இருக்கும்வரை, எந்த திருடனும் கிடைக்க மாட்டான்’ என்பதே, சமூகத்தின் இன்றைய கருத்து; இல்லையில்லை, சாபம்!