ஞாயிறு, 15 நவம்பர், 2015

வந்ததே சோதனை!

நாட்டு நிலவரமே தெரியாமல், பல பேர், ஆர்வக்கோளாறில், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு கும்மியடிக்கிறார்கள். அதுவும், விடுமுறை நாளென்றால் கொண்டாட்டம் அளவில்லாமல் போய் விடுகிறது. அவர்களுக்கெல்லாம், ஊட்டியில் நடந்த கதை தெரியவில்லை போலிருக்கிறது.
ஸ்டேட்டஸ் போட்டவரை, போலீஸ் பிடித்துக் கொண்டு போன நாள் முதலே, ஊருக்குள் ஒரே பீதியாக இருக்கிறது. தெரிந்தவர் என்பதற்காக, ‘என்ன ஸ்டேட்டஸ் போட்டார்’ என்றே படித்துப் பார்க்காமல், லைக் போட்டு விடுவதுதான், நம்மவர் பலருக்கு வழக்கம்.
அப்படி லைக் போட்ட பல பேர், இப்போது, ‘போலீஸ் வந்து விடுமோ’ என்ற பீதியில் இருக்கிறார்களாம். இதில், சில பேர், அந்த வில்லங்க ஸ்டேட்டஸை ஷேர் செய்து விட்டார்களாம். அவர்களது நிலைமையெல்லாம் என்னவாகும் என்றே தெரியவில்லை.
‘ஏதோ, என் புருஷனும் கச்சேரிக்குப் போனான்’ கதையாக பேஸ்புக்கில், காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் பல பேர், ‘இது, ஏதோ விவகாரம் போலிருக்கிறது’ என்று, கணக்கை க்ளோஸ் பண்ணுவது எப்படி என்று விசாரித்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி.
உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் விட்டால், நமது டைம்லைனில் யாரேனும் வில்லங்கப் பேர்வழிகள், எதையாவது கொண்டு சேர்த்து விடும் அபாயம், நிறையவே உண்டு. அப்படி ஏதேனும் நடந்துவிட்டால், போலீஸ்காரர்கள் யாரைப்பிடிப்பார்கள் என்கிற சந்தேகம், சில நாட்களாகவே மண்டையை குடைகிறது.
‘அடுத்தவர் டைம்லைனில் போட்டு விட்டவர் மீது தான் தவறு, அவரை மட்டும்தான் பிடிப்போம்’ என்றெல்லாம், நிச்சயமாக, எந்தப் போலீஸ்காரரும் சொல்ல வாய்ப்பில்லை. அதற்கெல்லாம் ஞானம் வேண்டுமே! ஆகவே, டைம்லைன் உரிமையாளர் நிச்சயம் குற்றவாளியாகவோ, குறைந்தபட்சம் சாட்சியாகவோ வழக்கில் சேர்க்கப்பட வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது.
இப்படியெல்லாம் யோசித்து, யோசித்து, நமது நிலைமை, தெனாலி படத்து கமலைப் போல் ஆகி விட்டது. எந்த ஸ்டேட்டஸை கண்டாலும் பயமாக இருக்கிறது. லைக் போடுவதற்கு முன்னதாக, மொக்கை ஸ்டேட்டஸ்களையும் விழுந்து விழுந்து படிக்க வேண்டியிருக்கிறது. ‘படித்துப் பார்த்தேன், சரி’ என்று எழுதி வைப்பது மட்டும் தான் பாக்கி.
ட்விட்டரில், கண்டதையும் ரீட்வீட் செய்வதை வழக்கமாக வைத்திருந்த நமக்கு, இப்போது புத்தி தெளிந்திருக்கிறது. ‘கடவுள் நல்லவர்; அவர் நம்மைப்போன்ற அப்பாவிகளையும், நம்மைப் போன்றவர் டைம்லைன்களையும், வில்லங்கம் விவகாரங்களில் இருந்து நிச்சயம் காப்பாராக’ என்று வேண்டிக் கொண்டே, ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்ல வேண்டியிருக்கிறது. என்ன செய்வது, சத்திய சோதனை!