வியாழன், 19 டிசம்பர், 2013

மரமெல்லாம் மரம் அல்ல!

மரமெல்லாம் மரம் அல்ல;
மனுச உசிராட்டம்!
ஆராச்சி பல செஞ்சு
ஆமான்னு கண்டாங்க!
இதுக்கெதுக்கு ஆராச்சி
இருக்குறாங்க பல சாட்சி!
எங்கூட்டு வாசல் தான்
எல்லாத்துக்கும்  கண்சாட்சி!
வெளியூரு வேலைக்கு நான்
வெடிஞ்சதுமே போகையில
வழியனுப்பி வெச்சதொரு
வாசமில்லா சிறு நாத்து!
மாசம் பல முடிஞ்சு
மத்தியானம் வந்தப்போ
மணமணக்கும் பூ மரம் தான்
எனக்கான வரவேற்பு!
சமஞ்ச பொண்ணாட்டம்
சடசடன்னு வளந்துடுச்சு
செம்பகப்பூ மரமா?
நம்பவே முடியலியே!
அய்யன் அம்மாளுக்கு
அப்புடியொரு சந்தோசம்!
மத்த மரமெல்லாம்
மழ வெய்யத்தாங்காது!
பருவம் தெச மாறி
பனி பேஞ்சாப்பூக்காது!
மகனாக வந்த மரம்
மாசமெல்லாம் பூப்பூக்கும்!
மண்ணுல வளந்தாலும்
கண்ணுக்குள்ள வளந்த மரம்!
கலகலன்னு சிரிச்சாப்புல
காத்தால பூக்கும் மரம்!
ஊடு மட்டுமல்ல
ஊரெல்லாம் மணந்த மரம்!
மாசமாசம் வருகையில
மரந்தானே வரவேற்கும்!
மரமெல்லாம் மரம் அல்ல;
மனுச உசிராட்டம்!
”அய்யன் அம்மாள
அலுங்காம காப்பாத்த
தம்பி நானிருக்கேன்;
தயங்காம நீ கெளம்பு”
வாசல்ல நின்ன மரம்
வழியனுப்பி வச்சதென்ன!
”காத்தால போகோணுமா
காப்பியாச்சும் குடியண்ணா!”
”அண்ணிக்கு நல்லாருக்கா
கொடம் எடுத்தா ஆகாதே!”
”பரிச்ச லீவுக்காச்சும்
பாப்பாள கூட்டி வாண்ணா!”
பாசத்த தோக்கடிச்ச
பச்ச மர உத்தரவு!
காத்துல காத்தாடி
கருசனையாப் பேசும் மரம்!
குடும்பத்தோட வந்தப்போ
காஞ்சு தான் போனதப்பா!
அசலூரு போன மகன்
அங்கருந்து வந்துட்டானே!
கடம முடிஞ்சதுன்னு
கண்ண மூடிடுச்சோ?
தெரிஞ்சா  சொல்லுங்களே
தேன் சிட்டுக் குருவிகளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக