செவ்வாய், 4 நவம்பர், 2014

ஆடு நனைகிறதாம்; அழுகிறது, ஓநாய்!

கோவையில் இருக்கிறது அந்த பிரபல மருத்துவமனை. அதன் தலைவர், நகைச்சுவையாக பேசக்கூடியவர். மருத்துவர் சங்க கூட்டம் ஒன்றில் அவர் பேசியபோது, சென்றிருந்தேன்.
‘சிகிச்சைக்கு முன், நோயாளியின் கண்களுக்கு கடவுளாகத்தெரியும் மருத்துவர், நோய் குணமாகி விட்டால், சாதாரண மனிதராகி விடுவார். சிகிச்சைக்கான பில் தரப்படும்போது, சாதாரண மனிதர், சாத்தான் போலவே தெரிவார்’ என்றார், அவர். கூட்டத்தில் இருந்த மருத்துவர்கள் மத்தியில் பலத்த சிரிப்பு, கைத்தட்டல். காரணம், அவர்கள் ஒவ்வொருவருக்கும் அப்படிப்பட்ட அனுபவம் நிச்சயம் இருந்திருக்கும்.
இப்போதெல்லாம், மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் கட்டணம், யாராலும் சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது. சளி, காய்ச்சல் என்று போனால்கூட, குறைந்தபட்சம் முந்நூறு ரூபாய் செலவின்றி மருத்துவமனையில் இருந்து வெளியே வர முடியாது.
அதுவும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் என்றால், குறைந்தபட்சம் ஐநூறு ரூபாயை தாண்டிவிடுகிறது. மருத்துவத் தொழில், மனிதர்களை கடந்து,
பேராசைக்காரர்களையும் தாண்டி, கொள்ளைக்கூட்டத்தினரின் கைகளை அடைந்து விட்டிருக்கிறது.
அன்றாடம் காய்ச்சிகள் மட்டுமல்ல; மாதச்சம்பளம் பெறுவோரும், மருந்துக் கடை நடத்துவோரைத்தான், தங்கள் குடும்ப மருத்துவராக பாவித்து, மாத்திரையும், ஆலோசனைகளும் பெற வேண்டியிருக்கிறது.
சாதாரண சளிக்கு, முந்நூறு ரூபாய் வசூலிக்கும் மருத்துவரைக் காட்டிலும், பத்து ரூபாய் மாத்திரையில் தீர்வளிக்கும் மருந்துக்கடை ஊழியரே, இன்று பலருக்கு கடவுளாகத் தெரிகிறார்.
மருத்துவர்கள், மருந்து நிறுவனத்தாரிடமும், ஆய்வகம் நடத்துவோரிடமும் கமிஷன் வாங்கிக்கொண்டு, நோயாளிகளுக்கு துரோகம் இழைக்கும் கொடுமை, உலக நடைமுறையாகி விட்டது.
தங்கள் தொழிலுக்கு இடையூறு செய்யும் கம்பவுண்டர்களையும், மருந்துக் கடையினரையும், ‘போலி மருத்துவர்கள்’ என்று புகார் செய்து, போலீசில் சிக்க வைக்கும் மருத்துவர்களும் இருக்கின்றனர். மருத்துவர் சங்க கூட்டங்களில், அவர்கள் விவாதிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் இரண்டாகத்தான் இருக்கும்.
ஒன்று, போலி மருத்துவர்கள் பிரச்னை; இன்னொன்று, சிகிச்சை சரியில்லை என்று நோயாளிகள் உறவினர்கள் மருத்துவமனையில் நேரடித்தாக்குதலில் இறங்குவது. போலி மருத்துவர்களால், அவர்களிடம் சிகிச்சைக்குச் செல்வோருக்குத்தான் பிரச்னை. இதில், ஒரிஜினல் மருத்துவர்களுக்கு கவலை என்ன வேண்டியிருக்கிறது? எல்லாம், ஆடு நனைகிறதே என்று, ஓநாய் அழுத கதை தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக