ஞாயிறு, 2 நவம்பர், 2014

சென்சார்...நல்ல சென்சார்...!

சிங்காரச் சென்னை மாநகருக்கு முதல் முதலாக சென்றிருந்தேன். வேறெதற்கு? அலுவலகப்பணி தான். ஓட்டலில் சாப்பிட்டு முடித்தபின், கை கழுவச் சென்ற இடத்தில் ஒரு அதிசயம். முன் சென்ற நண்பர், கண்கள் அகல விரிய, ‘அட..., அட...’ என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தார்.
‘சார், என்னாச்சு என்னாச்சு’ என்றேன். ‘இங்க பாருங்க’ என்றார். அவர் கை நீட்டிய இடத்தில் தண்ணீர் வரும் டேப் தான் இருந்தது. எனக்குப் புரியவில்லை. அவர், கை கழுவுவதுபோல், கையை அருகில் கொண்டு சென்றதுமே, டேப்பில் இருந்து தண்ணீர் குபுகுபுவென கொட்டியது.
கையை அகற்றியும், தண்ணீர் நின்றது. மீண்டும் கையை அருகில் கொண்டு சென்றதும், தண்ணீர் கொட்டியது. இதெல்லாம், கிராமங்களில் இருந்து சென்றிருந்த நாங்கள், முன்னெப்போதும் கண்டே இராத, கேட்டும் இராத அதிசயம்.
அதெப்படி? ‘நாம் கை கழுவ வருவதைப் பார்த்து, யாரோ டேப்பை திருகி தண்ணீரை திறந்து விடுகிறான்போல’ என்று சந்தேகம் வேறு. அப்புறம்தான் இன்னொரு நண்பர் சொன்னார், அதெல்லாம், ‘சென்சார்’ சம்பந்தப்பட்ட மேட்டர். கை அருகில் வருவதை ‘சென்சார்’ உணர்ந்தாலே, தண்ணீர் கொட்டுமென்று.
இது நடந்து பல்லாண்டுகள் ஆனாலும், இன்னும் அந்த அதிர்ச்சியும், ஆச்சர்யமும் மனதை விட்டு அகலாமல் அப்படியே இருக்கின்றன.
இப்போதெல்லாம், சிறு சிறு நகரங்களில் இருக்கும் ஓட்டல்களில் கூட சென்சார் பொருத்திய தண்ணீர் டேப் வைத்து விட்டார்கள். டாய்லெட்டுகளில் கூட, சென்சார்கள் பொருத்தப்பட்டு விட்டன.
இத்தகைய பெருமைக்குரிய சென்சார்கள் பழுதாகி விட்டால் பண்ணும் இம்சை இருக்கிறதே! ஆளில்லாத நேரத்தில்கூட, தண்ணீரை குபுக் குபுக்கென கொட்டிக் கொண்டிருக்கும். தானே தண்ணீர் வந்து, தானே நிறுத்தி, மீண்டும் தானே வந்து, நின்று... ஐயோ...! கொஞ்சம் மனம் பலவீனமான நபர்கள், இப்படி நடப்பதைப் பார்த்து விட்டால், கூக்குரல் எழுப்பி, அலறியடித்து ஓட்டம் பிடித்து விடுவர் தானே? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக