ஞாயிறு, 5 அக்டோபர், 2014

பெருகுவது யார் வருவாய்?

உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில், வருவாயை பெருக்குவதாக சொல்லி, ஆங்காங்கே, கடைகள், வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டிருப்பர். அவற்றில் ஒரு முறை, ஒருவர் வாடகைக்கு வந்து விட்டால் போதும், அதன்பிறகு அவர்தான் அந்த கடையின் உரிமையாளர் ஆகி விடுவார்.
அவர் செத்துப் போனாலும், அவரது வாரிசுதாரர் வந்து உட்கார்ந்து விடுவார். அவரால் கடை நடத்த முடியவில்லை என்றால், வேறு யாருக்காவது கடையை விற்று விட்டுப் போய் விடுவார். அதெப்படி அரசு கட்டடத்தை, விற்க முடியும் என்றெல்லாம் கேட்கப்படாது. அது அப்படித்தான்.
இரண்டு பேரும் பாகஸ்தர்களாக இருந்து தொழில் செய்தது போல், ஒரு ஒப்பந்தப் பத்திரம் ஒன்றை தயார் செய்து கொள்வர். பிறகு, 'இருவரும் தொழிலில் பிரிந்து விடுவோம், எனக்கு தொழில் செய்ய விருப்பமில்லை, வாடகைக்கு பிடித்த கடையை இனிமேல் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்' என்று பிரிவினை பத்திரமும் தயார் செய்வர். அப்புறம் அந்தக்கடை புதியவருக்கு சொந்தமாகி விடும். அவருக்கு முடியவில்லை என்றால், அடுத்தவருக்கு வி்ற்பார். எல்லாம், முதலில் சொன்ன நடைமுறைதான். தமிழகம் முழுவதும் அரசு வணிக வளாகங்கள் எல்லாம் இப்படித்தான் சீரழிகின்றன.
ஒரு சம்பவம். நகராட்சி பஸ்ஸ்டாண்டில், ஒரு வணிக வளாகம் இருக்கிறது. அதில் தரை தளம், முதல் தளம் என இரண்டு தளங்கள் கொண்ட வணிக வளாகத்தை வாடகைக்கு எடுத்திருந்தவர், நொடிந்து போனார். அவரால் கடை நடத்த முடியவில்லை. பெரும் தொகைக்கு விற்று விட்டார். பத்தாண்டுக்கு முன்னாகவே, 60 லட்சம் என்றார்கள். நம்புங்கள், நகராட்சி கட்டடத்துக்குதான், இந்த விலை. நகராட்சியின் முக்கிய புள்ளிகளுக்கான கவனிப்புச் செலவு தனி.
அரசு வணிக வளாகங்களில் கடை வாடகைக்கு எடுப்பவர்களுக்கென்று ஆயிரம் விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை அரசும் சரி, அதிகாரிகளும் சரி, பெரிதாக மதிப்பதில்லை. அவற்றில் இருக்கும் ஓட்டைகள் பலவற்றை அவர்கள் தானே, காட்டிக்கொடுக்கின்றனர்.
தரை தளத்தில் கடை நடத்தும் ஒருவர், பக்கத்து கடையை மேற்சொன்ன நடைமுறைப்படி கடையை விலைக்கு வாங்கி விட்டார். இப்போது இரு கடைகளையும் இணைத்தால்தான் அவருக்குப் பயன். நடுவில் சுவர் இருக்கிறது. அதை அகற்றி விட்டார். இது தரை தளம். அதன் சுவரை அகற்றினால், மேல் தளம் பாதிக்காதா? பாதிக்கும்தான். கட்டட உறுதித்தன்மை போய் விடும். பாதாளம் வரை பாயும் பணம், பக்கத்து கடை சுவர் இடிப்பதற்கு பாயாதா என்ன? இப்படிப்பட்ட பல வணிக வளாகங்கள், தமிழகம் முழுவதும் இருக்கின்றன.
கட்சிக்காரர் ஒருவர் சொன்னது நினைவில் இருக்கிறது. ''சார், நீங்க வேற, இப்பத்தான் பத்திரப்பதிவுல ரொம்ப உஷாரா இருக்காங்க. முன்னயெல்லாம், ஹைவேஸ் ரோட்டுல கடை வெக்குற உரிமைய 40 ஆயிரத்துக்கு வித்துட்டு, பத்திரம் பதிவு செஞ்சு கொடுத்த கதையெல்லாம் நடந்திருக்கு!''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக