ஞாயிறு, 26 அக்டோபர், 2014

அமிலமாக மாறி விடும் கடல் நீர்!

மனிதர்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடு, கடல் சூழலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக, பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொழிற்துறையினர் உற்பத்தி செய்யும் கார்பன் டை ஆக்சைடில் மூன்றில் ஒரு பகுதி, கடலில் கலந்து விடுகிறது.
இது, இயற்கையான வேதிப்பண்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, கடல் நீரை அமிலமாக மாற்றி விடுகிறது. இந்த அமிலமாக்கும் செயல், முந்தைய மதிப்பீடுகளை காட்டிலும் பல மடங்கு அதிகப்படியாக நடைபெற்றுள்ளதாக, தற்போதைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்து பிரிட்டனின் தலைமை விஞ்ஞானியான சர் மார்க் வால்போர்ட் கூறுகையில், ‘‘தொழிற்புரட்சிக் காலத்தில் இருந்ததை காட்டிலும், இப்போது 25 சதவீதம், கடல் நீரின் அமிலத்தன்மை அதிகரித்துள்ளது. இதற்கு மனிதர்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடே காரணம்,’’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘‘கடல் நீருடன் கலக்கும் கார்பன் டை ஆக்சைடு, வேதி வினை புரிந்து, கார்பானிக் அமிலமாக மாறி விடுகிறது. தற்போது வெளியேற்றப்படும் விகிதத்திலேயே கார்பன் டை ஆக்சைடு தொடர்ந்து வெளியேற்றப்பட்டால், கடல் நீரின் அமிலத்தன்மையும் தொடர்ந்து அதிகரிக்கும். இது, கடல் சுற்றுச்சூழலுக்கும், கடல் வாழ் தாவரங்கள், உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்,’’ என்றார்.
பல்வேறு காரணங்களால் கடல் நீர் வெப்பமாகி வருவதும், கடல் சுற்றுச்சூழலை பாதித்து வருகிறது. இத்தகைய பாதிப்பால், ‘எதிர்காலத்தில் கடலில் மீன் இனங்களே இல்லாத நிலை கூட ஏற்பட்டு விடும்’ என்றும், விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
http://www.bbc.com/news/science-environment-29746880

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக