சனி, 14 டிசம்பர், 2013

அடிமையின் பலம்!


காப்பிக்கோப்பையுடன்
காலைத்துயில் எழுப்பும்
கடைக்குட்டி பாப்பாவின்
கற்பூரச்சிரிப்புக்கு
காலமெல்லாம் நான் அடிமை!
இரவுப்பொழுதினிலே
எல்லோரும் உறங்குகையில்
தான் மட்டும் விழித்திருந்து
தந்தைக்கு பரிமாறும்
தலைமகளே நான் அடிமை!
நடுநிசி கடந்தாலும்
கடும்பசியாய் இருந்தாலும்
‘கணவன் உண்ணவில்லை
கடுகளவும் பசியில்லை;
காலை உண்டதெல்லாம்
குரல்வளையில் உள்ளதென’
இனிதே பொய் உரைக்கும்
இல்லாளின் ‘இம்சை’க்கும் நான் அடிமை!
‘பப்பாளிப்பழம் கொடுத்து
பல நாட்கள் ஆனதடா
பார்த்தாயா; உண்டாயா’
எனக்கேட்பார் என் தந்தை!
கொடுத்துச் சென்று விட்டால்
கூடையிலே போட்டிடுவார் என்றெண்ணி
கூடவே நின்றிருந்து
புசிப்பதையும் பார்த்திடுவார்!
நள்ளிரவு என்றாலும்
நண்பகல் என்றாலும்
நான் வந்து சேரும் வரை
தான் துஞ்சா காத்திருக்கும்
தந்தைக்கும் நான் அடிமை!
இமை மூடா இரவுப்பணி
சுமையாக இருந்தாலும்
தமைக்காக்கும் தனயன்
துஞ்சுகிறானென்று
பகல்பொழுதில் விளையாடும்
பக்கத்துச் சிறுவர்களை
பார்வையிலே அதட்டும்
பாசமிகு அன்னைக்கும் நான் அடிமை.
‘பல நாளாய் பார்க்கலையே
பசங்க படிப்பதெங்கே
வேல வேலையின்னு
வெய்யில்ல அலையாதே
காசு பணமெல்லாம்
தானாத்தேடி வரும்
தாய் தகப்பனை பாத்துக்கடா’
பாசமழை பொழியும்
பண்பாளர் பேச்சுக்கும் நான் அடிமை!
அவசரம் என்றழைத்தால்
ஓடோடி வந்துதவும்
உறவுக்கும் நான் அடிமை!
வாழ்ந்திருப்போம் இப்படியே
வாங்கி வந்த வரம் அப்படி!
அடிமைக்குத் தானிருக்கும்
ஆயிரம் பலவீனம்!
அடியவன் பலமெல்லாம்
அடிமையாய் இருப்பது தான்!
காரணம் கூறணுமா;
ஆம்! ஆயிரத்தில் நான் ஒருவன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக